Saturday 21 February 2015

சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை தீர்க்கப்படக்கூடிய ஒன்றா?

இலங்கையின் தற்போதைய அதியுச்ச சமுக சூழல் வாழ்வாதார பிரச்சனையாக கவனிக்கப்படவேண்டிய (??)  யாழ்குடாநாட்டின் சுன்னாக பிரதேசத்தில்  கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ள பிரச்சனையின் சரியான தீர்வினை எப்படி பெறலாம் என்பது பற்றிய முன்மொழிவுகளை இந்த கட்டுரை பொதுமக்களுக்கும், இந்த பிரச்சினையினை கையாள வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் முன்வைக்கிறது.

இந்த பிரச்சனையின் தீர்வுகள கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம். முதலாவது குறுகியகால உடனடி தீர்வுகள், இரண்டாவது நீண்டகால தீர்வுகள்.

குறுகிய காலதீர்வுகள்,மக்களின் குடிநீர் தேவைகளுக்குரிய நீரினை தாங்கிகள் மூலம் வழங்கல், இந்த பிரச்சனையிற்கு மூலமான எண்ணெய் கசிவு ஏற்படும் மூலத்தினை கண்டறிந்து உடனடியாக அதிலிருந்து எண்ணெய் மேலும் நிலத்தடி நீரிற்கு கலக்காமல் இருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கையினை எடுத்தல், கழிவு எண்ணெய் கலந்த நீரினை அருந்துவதால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பனவாகும். எனினும் இந்த தீர்வுகள் நீண்டகாலத்திற்கு செல்லுபடியானவை அல்ல. ஏனெனில் குறித்த பிரதேசத்தின்  நிலத்தடி  நீரின் தேவை என்பது குடிநீருடன் மட்டுப்படுத்த பட்ட தேவை ஒன்று அல்ல. விவசாயம் மற்றும் இதரதேவைகள் அனைத்துக்கும் நிலத்தடி நீர் ஒன்றே நீர் மூலமாக இருப்பதால் உடனடியாக நீண்டகால தீர்வினை நோக்கி நகர வேண்டியது பொறுப்பானவர்களின் கடப்பாடு ஆகும். உதாரணமாக குடிப்பதற்கு தாங்கிகளில் நீரினை கொடுத்தாலும் ஒரு நாளைக்கு  இரண்டு வேளை குளிப்பதற்கு அவசியமாக வெப்ப வலயமான யாழ்குடாநாட்டில் குளிப்பதற்கு குறிப்பிட்ட கழிவு நீர் கலந்த நீரினை பயன்படுத்துவதால் தோல்நோய், புற்று நோய் போன்ற பாரிய நோய்களுக்கு மக்கள் உள்ளாவார்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் விழுப்புணர்வு ஏற்படுத்துவது என்பது ஒவ்வொருவரது கடமையாக கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தமக்கு கிடைத்த தகவல்களை பகிருந்து கொள்வது அத்தியாவசிய கடமையாகும். அதேவேளை தகவல்களை பகிர்கின்றோம் என்று உண்மைக்கு புறம்பான மக்களை பீதியுறச்செய்யும் வகையில் பகிர்தலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நீண்டகால தீர்வு எனும் பதத்திற்குள் மூன்று பொறிமுறைகளை உள்ளடக்கலாம். முதலாவது யாழ் பிரதேசத்தின் அனைத்து தேவைகளும் நிலத்தடி நீர் என்ற ஒரு மூலத்திலேயே அடங்கியிருப்பது சமூகத்திற்கு மிக ஆபத்தான ஒன்று என்பது இந்த சம்பவத்தின் மூலம் மிக தெளிவாக்கப்படிருக்கிறது. ஆகவே வேறு நீடித்து நிலைத்திருக்க கூடிய நீர் மூலங்களை பெறவேண்டிய அவசிய தேவைக்கு யாழ் குடாநாடு இந்த அனர்த்தத்தின் மூலம் தள்ளப்படுள்ளது. இந்த அடிப்படையில் உடனடியாக நீர்வளங்கல் பொறிமுறை ஒன்றினை நிர்மாணிப்பது அதேவேளை இந்த தொகுதிக்கான நீர் எங்கிருந்து பெறுவது என்பதற்கான பதில் தெளிவாக நிலத்தடி நீராக இருக்க கூடாது என்பதுதான். அடிப்படையில் மேற்குறித்த கழிவு எண்ணெயினை நீர்ப்படுக்கையில் இருந்து சுத்திகரிக்கும் வரை வெயில் காலத்தில் நிலத்தடி நீரின் உறிஞ்சலை கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் விடப்பட்ட கழிவு நீர் நிலத்தின் அடியில் காணப்படும் karst எனப்படும் குழிகளில் ஆங்காங்கே நிலத்தடி நீரோட்டத்தின் மூலம் தேங்கி காணப்படும். ஆகவே ஒருபுறத்தில் உறிஞ்சல் கூடும்போது அந்த உறிஞ்சலை நிரப்புபவதற்கு நீர் அந்த திசை நோக்கி ஓடத்தொடங்க நீருடன் சேர்ந்து எண்ணெயும் பயணிக்க ஆரம்பிக்கும். இதனாலேயே ஒவ்வொரு நாளும் அதிசயம் நடப்பது போல் ஒவ்வொருவர் கிணற்றிலும் எண்ணெய் வந்த வண்ணம் உள்ளது. எனினும் மக்களின் நீர் தேவையினை வேறு ஒரு நீர் மூலத்தில் இருந்து  சரியாக பூர்த்தி செய்யாமல் இதனை கட்டுப்படுத்த முடியாது. மேலும் புதிதாக ஆழமான குழாய் கிணறு தோண்டுவது, யாழ்ப்பாண வட்டார வழக்கில் கூறப்படும் குண்டடித்தல் எனப்படும் கிணற்றை ஆழமாக்கும் செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருப்பதால் மேலும் எண்ணெய் பரவல் நடைபெறுவதை சிறு அளவில் தடுக்கலாம். எனினும் பெருத்த மழையில் நீர்படுக்கை நீரினை பெறும்போது கட்டாயம் எண்ணெய் வெளிப்படுவதை தடுக்க மூடியாது. இதனை இல்லாமல் செய்வதற்கு நீர்படுக்கை சுத்திகரிப்பு எனும் செய்முறைகளுக்கூடாக மட்டுமே செய்யமுடியும். இதனை பற்று அடுத்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம்.

யாழ்குடாநாட்டிற்கான மாற்று நீர் மூலங்கள்
தற்போது நீர் மூலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு என்ன என்ற கேள்விகளுக்கு இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம். ஒன்று ஏற்கனவே பெரும் சர்ச்சைக்குரிய இரணைமடு குடிநீர் திட்டம். ஆனால் இந்த திட்டம் மொழியப்பட்ட காலம் கிளிநொச்சி குறைந்த சனத்தொகையுடன் நீர் தேவைகள் குறைவாக காணப்பட்ட காலப்பகுதியாகும். ஆனால் வளர்ந்து வரும் அபிவிருத்தி நிலையில் எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்தேவைகள் அதிகரிக்கும் போது இந்த திட்டம் மாவட்ட முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

இரண்டாவது கடல்நீர் சுத்திகரிப்பு, இது செலவு மிக்க தீர்வு என்றாலும் மிகபயனுள்ள தீர்வு. ஏனெனில் ஏற்கனவே உவர்நீரான கரையோர பகுதி கிணறுகளை இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் மூலங்களாக பாவிக்கலாம். மேலும் குடாநாட்டை பொறுத்தவரை கடல் நீர் தாராளமாக கிடைக்க கூடிய ஒன்றாகும். கடல் நீர் மூலம் குடிப்பதற்கும், வீட்டு தேவைகளுக்குமான நீர் தேவை பூர்த்தி செய்து சமாந்திரமாக  நீர்படுக்கையினை சுத்திகரிக்கும் பட்சத்தில் பட்சத்தில் எதிர்காலத்தில் யாழ்குடாநாடு விவசாயத்திலும் நீர் வளத்திலும் தன்னிறைவினை காணும் ஒரு பிரதேசமாக மாறும்.

நீர்ப்படுக்கை சுத்திகரிப்பு
நீண்டகாலத்தீர்வுகளில் இரண்டாவது அமிசம், நீர்ப்படுக்கை சுத்திகரிப்பு ஆகும். யாழ் குடாநாட்டின் நீர்ப்படுக்கை பெரும்பாகும் சுண்ணாம்புக்கற்களால் ஆன நிலத்தடி குழிகளை கொண்ட அமைப்பாகும். அமைப்பில் உள்ளே சென்ற எண்ணெய் கழிவுகள் ஆங்காங்கே உள்ளே காணப்படும் குழிகளில் தேங்கி கொண்டு மழையில் மூலம் நீர்மட்டம் உயரும்போதோ அல்லது குறித்த பிரதேசத்தில் உறிஞ்சல் அதிகரிக்கும்போதோ அந்த திசையில் நகர்ந்து கிணற்றின் மூலம் மேலே வரும்.

நீர்படுக்கை சுத்திகரிப்பில் முதலாவது அமிசம் எண்ணெய் கசிவிற்கான மூலத்தினை கண்டறிந்து அதனை தடைசெய்தல். எண்ணெய் கசிவிற்கு காரணம் மின்நிலையம் என்று அதனை மூடுவதுதான் தீர்வு என்றும் முடிவெடுப்பதில் சில மேலதிக புரிதல் அவசியமான ஒன்று. உண்மையான பிரச்சனை நிலத்தினுள் செலுத்தப்பட்ட எண்ணெய் எந்த இடத்தில் இருகின்றது என்பதனை சரியாக கண்டறிதலும் அதனை உடனடியாக தகுந்த பொறியியல் உதவியுடன் அகற்றுதலும் ஆகும். இந்த இடம் குடாநாட்டு நிலவரத்தில் ஒரு இடத்தில் எண்ணெய் செலுத்தப்பட்டிருந்தாலும் நீரோட்டத்தில் பரவி பல்வேறு இடங்களில் நிலத்தடியில் காணப்படும் குழிகளில் தேங்கி பரவிக்கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம்.

முழுமையான நிலத்திடி நீர்படுக்கை சுத்திகரிப்பு (Restoration of contaminated aquifer) என்பது சூழல் நிலவியலாளர் (Environmental Geologist), நிலவியல் பொறியலாளர் (Environmental engineer) தலைமையில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டம் ஒன்றாகும். மேலும் நிலத்தடியினை ஆய்வு செய்யும் கருவிகள், முழுமையான ஆய்வு திட்டங்கள் அடங்கிய செயல்முறையாக இருக்க வேண்டும்.

நீண்டகால தீர்வின் நான்காவது அமிசம், எதிர்கால திட்டமிடலும் கண்காணிப்பு பொறிமுறையும். இதனுள் சுன்னாகம் போன்ற குடிமக்கள் நெருங்கி வாழும் விவசாய பகுதிக்குள் இப்படியான கழிவு களை உருவாக்க கூடிய தொழிற்சாலைகளை அகற்றி கடற்கரை ஓரமாக மக்கள் பாவனை அற்ற இடங்களில் உருவாக்கல், மாற்று சக்தி மூலங்களை பயன்படுத்தல், அபிவிருத்தி திட்டங்கலிற்கான அனுமதிகளில் சூழல் பாதுகாப்பு முகாமைத்துவத்தை பொறிமுறையினை கட்டாயாமாக்கி கடுமையாக கடைப்பிடித்தல் என்பனவாகும்.

எவ்வாறாயினும்  இயற்கை எனும் சிக்கலான சூழலிற் தொகுதியில் இவ்வாறான தவற்றை செய்தால் அதனை திருத்துவதும் மீட்டெடுப்பது என்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு மிக கடினமான ஒன்று என்பது வெளிப்படையான உண்மை!



Monday 2 February 2015

சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை கட்டுரையில் பதிப்பு வடிவம்

யாழ் தினக்குரலில் வெளியான சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை கட்டுரையில் பதிப்பு வடிவம்

Sunday 1 February 2015

சுன்னாகம் நிலத்தடி கழிவு எண்ணெய் பிரச்சனை - காலக்கோட்டு தொகுப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் - கழிவு எண்ணெய் கலப்பு பற்றி பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் இதுவரை என்ன செய்துள்ளன? சரியான முடிவு எடுக்காமல் இருப்பதற்குரிய காரணிகள் என்ன? இதுவரை பொதுமக்களின் தகவலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. ஆனால் இவை எவையும் தகுந்த தீர்வினை பெற்று தரவில்லை , நன்றி Chunnakam Jaffna










Thursday 29 January 2015

யாழ் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை - தீர்வினை நோக்கி முன்னேறுவதற்கான முன்மொழிவுகள்!

யாழ் குடாநாட்டு மக்கள் அனைவருக்கும்,
இன்றைய யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனையில் காணப்படும் மிகமுக்கியமான கடிந்து சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் பிரச்சனை சார் விஞ்ஞான தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் இருப்பதாகும். இது மக்களிடையே அனாவசிய பயத்தினையும், பீதியினையும், யதார்த்தத்திற்கு மீறிய கற்பனை குதிரைகளையும் வலம் வரச்செய்கிறது.

பிரச்சனை சார் விஞ்ஞான தகவல் எனும்போது இதனை இரண்டு பகுதிகளாக இங்கு கூறலாம், முதலாவது ஒவ்வொரு கிணற்றையும் முறைப்படுத்திய இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளும் வழிமுறையும், பாதிப்பின் அளவு எவ்வளவு, இந்த பாதிப்பு அதிகரிக்கும்போது எப்படியான குணங்குறிகள் நீரில் காணப்படும் என்பது பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவதாகும்.

இதற்கான அரச பொறுப்பு நிறுவனங்கள் நீர்வள சபை (http://www.wrb.gov.lk/), மத்திய சூழல் அதிகாரசபை (http://cea.lk/), சுகாதார அமைச்சு அலுவலகம் (http://www.jaffnahealth.org/english/view.php?jaffnahealth=3)   என்பனவாகும். எனினும் பிரச்சனையின் அளவு பெரிதாக இருப்பதால் (உத்தியோக பற்ற்ற தகவலின் படி 1500 இற்கு மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதால்) மேற்குறித்த நிறுவனங்களில் காணப்படும் ஆய்வு கூட வசதிகள் மூலம் இவற்றை உடனடியாக கண்டறிவதற்கான சாத்தியகூறுகள் மிக குறைவானது. மேலும் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தால் இன்னும் சிக்கலாகும் என்பதனை எதிர்பார்க்கலாம்.

இத்தகைய நிலைமையில் தீர்வு என்ன? இருக்கின்றது! கையடக்க ஐதரோகாபன் கண்டறி கருவிகள், இவை பொதுவாக மத்தியகிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறு உள்ள பிரதேசங்களில் ஆய்வாளர்கள் வைத்திருக்கும் கருவி. இதுபற்றிய முழுவிபரம் இந்த தளத்தில் இருக்கிறது (www.petrosense.com/PHA-100.html), இதன் மூலம் உடனடியாக நீரில் உள்ள எண்ணெயின் அளவினை களத்திலே கண்டறிய முடியும்.

இதனை பெறுவதற்கு இலங்கையில் இத்தகைய கருவியினை பெற்றுத்தரும் நிறுவனம் http://www.aipl.lk/ குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு இந்த தொழில்நுட்ப உதவியினை பெறமுடியுமாக இருந்தால், மேற்குறித்த அரச நிறுவனங்களின் உத்தியோகத்தவர்களின் உதவியுடனும், யாழ் பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் தொண்டர் அணி ஒன்றினை தொழிநுட்ப உதவிக்காக ஏற்படுத்துவதன் மூலம் உடனடியாக கிணற்றின் மாசுறு நிலைமையினை அறியமுடியும். இதன் மூலம் இந்த பிரச்சனையின் பாதிப்பு எந்த அளவு என்பதனை மக்கள் அறிந்து கொள்வதுடன் வீண் பயத்தினையும், பிரச்சனை உள்ள கிணறுகளிற்கான மாற்று வழி என்பதனையும் உடனடியாக கண்டறிய முடியும்.

இரண்டாவது இந்த பிரச்னைக்கு மூலமான எண்ணெய் கசிவு எங்கிருந்து வருகிறது என்பதனை சரியாக கண்டறிவது. வெறுமனே குறித்த ஒரு நிறுவனத்தை மட்டும் குற்றம்சாட்டப்படுவது இந்த பிரச்சனைக்கான காரணமே அன்றி தீர்வு அல்ல! இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதால் பிரச்சனையினை மேலும் சிக்கலாக்கபடுகிறது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று! குறித்த நிறுவனம் வலுவாக இந்த பிரச்னைக்கு தாம் காரணம் இல்லை என்று எதிர்ப்பினை தெரிவிக்கிறது.

அவர்களோ, அல்லது வேறு யார் என்பதனை கண்டறிய வேண்டிய அரச நிறுவனங்கள் இதுவரை ஆக்கபூர்வமாக தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவாக முன்வைக்கவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் அதிருப்தியும், ஆத்திரமும் அடைய ஆரம்பித்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்களை  தனிமனித பயமுறுத்தலும், போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை நோக்கத்தில் இருந்து திசைதிருப்பும் முயற்சியும் தமது அதிகார, சுய நல நோக்கங்களுக்காக சிலரால் செய்யப்படலாம். ஆதலால் இந்த பிரச்சனைக்கான உண்மையான தீர்வு என்ன என்பதனை கண்டறிய வேண்டும். இந்த பிரச்சனையின் உண்மையான தீர்வு  எண்ணெய் எங்கிருந்து வருகிறது என்பதனை சரியான விஞ்ஞான முறைப்படி கண்டறிந்து அந்த மூலகாரணியை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தினை உடனடியாக வகுத்து செயலுக்கு கொண்டு வருவது.

மேலும் இந்த பிரச்சனை எல்லாவித பேதங்களையும் கடந்து தீர்வு ஒன்று மட்டுமே இலக்கு என்ற நோக்கத்தில் அணுகப்படவேண்டும், நான் இந்த கட்சியை சேர்ந்தவன், இது எனது பொறுப்பல்ல போன்ற எண்ணத்துடன் எவாரவது செயற்படுவார்களாக இருந்தால்  அடிப்படை மனித விழுமியங்களில் இருந்து தூரத்தில் இருக்கிறார்கள் என்பதனை கடுமையாக சுட்டிக் காட்ட வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உண்டு. ஏனெனில் நீர் என்பது அனைவருக்கும் பொதுவானது.


இந்த பிரச்சனை தொடர்பாக தீர்வினை நோக்கிய அனைத்துவகை ஆய்வு திட்டமிடலிலும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, ஆலோசனை என்பவற்றில  எனது நேரத்தினையும், அறிவினை, திறன்கள் பங்களிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இது தொடர்பான பொறுப்பில் இருப்பவர்கள் எனது உதவிக்காக எப்போதும் தொடர்பினை ஏற்படுத்தலாம்! 

Monday 26 January 2015

சுன்னாகம் எண்ணெய் கழிவு பிரச்சனை – ஒரு சூழலியல் விஞ்ஞான புரிதல்

இன்று இலங்கையின் வடபகுதி யாழ்குடாநாட்டில் நிலத்தடி  நீரில் பெற்றோலிய கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக மிகப்பெரிய சமூக சூழல் பிரச்சனையாக எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் மின்நிலையத்தினை நடாத்தும் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்த பிரச்சனை மிக ஆழமான பரிமாணம் கொண்டுள்ளது. விஞ்ஞான சூழலியல் புரிதலை பொதுமக்களுக்கு தருவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

நாம் வாழும் சூழலின் இயக்கவியலை புரிந்திருப்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழ் சித்த மரபு அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்ற இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்பினை விளக்குகிறது. இந்த அடிப்படையில் சூழலில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், மற்றவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வாழும் அனைவருக்கும் பலனை தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இன்று விஞ்ஞானம், நவீன பொருளாதாரத்தின் பலன்களை அனுபவிப்பவர்களாக இருக்கும் அதேவேளை அவற்றால் ஏற்படும் பாரதூர விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே சூழல் பிரச்சனைகள் வந்த பின் தீர்க்க வேண்டியவை இல்லை, வந்தபின் தீர்ப்பது என்பது மிகசெலவீனமான, மீளமுடியாத ஒன்று என்பதுடன் வருமுன் காக்கும் நடவடிக்கையே அவசியமான ஒன்று!

இந்த அடிப்படையில் பெற்றோலியக்  கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுப்போது என்ன நடக்கிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பெற்றோலிய பொருட்கள் ஐதரோகாபன் எனும் இரசாயன வகுப்பை சேர்ந்தவை. இந்த வகை இரசயான பொருட்கள் பலது இருந்தாலும் கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது வகையானவைக்கே முறையான விஞ்ஞான ஆய்வுகள் நடாத்தப்பட்டு தகவல்கள் காணப்படுகின்றன. இவை நீரில் கரையா திரவங்கள். அதாவது நீருடன் கலக்கும் போது நீரும் இந்த ஐதரோ காபன்களும் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு அவத்தைகளில் காணப்படும். சிலவகை பகுதியாக கரையும் தன்மை உடையவை.

இவை நிலத்திற்கு செல்லும்போது நிலத்தின் மேற்பரப்பினையும், மண்ணில் காணப்படும் பகுதியாக நீர் நிரப்பல் பிரதேசத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும்.  இந்த மாசுபடுத்தல் மிக தீவிரமான ஒன்று.

நிலத்தில் பெற்றோலிய பொருட்கள் விடப்படும்போது புவியீர்ப்பு விசையின் மூலம் கீழ்நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். இது மண்ணின் இடைவெளியில் காணப்பட்டும் பகுதியாக நீரினால் நிரப்பபட்ட பிரதேசத்தின் ஊடாகவும், மண்ணின் இடைவெளிகளிலும் அவை நிரம்பும் வரை பயணிக்கும். இந்த பயணம் பெற்றோலியம் ஊடுபுகாத கற்படுக்கை காணப்படும் வரையோ அல்லது நீலத்தடி நீரின் கொள்ளளவு அதிகரித்து மண்ணில் நீரின் ஈரலிப்பு அதிகமாக இருப்பின் நீரின் தள்ளுவிசை மூலமோ கட்டுப்படுத்தப்படும். இத்துடன் வெப்பநிலை அதிகரிக்கும்போது இவற்றின் ஆவியாக்கம் அதிகரித்து மேற்புறத்திற்கு பரவ ஆரம்பிக்கும். இப்படி ஆவியாக்கல் மூலம் மேற்புறத்துக்கு பரவும் ஐதரோ காபன்கள் நிலத்தின் மேற்புறத்தில், அல்லது சற்று ஆழமான பகுதியில் ஒருவித சிக்கலான எண்ணெய் படலத்தினை உருவாக்கி பக்கவாக்காக அசைய ஆரம்பிக்கும். இதன் பரம்பல் கீழ்வரும் படத்தில் மாதிரியுருவாக காட்டப்படுள்ளது.

இந்த ஐதரோகாபன் நிலத்திற்கு, நிலத்தின் கீழ்புறத்திற்கு செல்லும்போது இவை மனிதரை நேரடி ஆவியாக்கல், திண்மபொருட்களாக அல்லது சிலபோருட்களில் உறிஞ்சப்பட்ட நிலையில் அடையலாம்.

இத்தகைய ஐதரோகாபன்களில் காணப்படும்மனிதனுக்கு, சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களை பற்றி சற்று பார்ப்போம். இவற்றுள் முதன்மையானது பென்சீன் எனப்படும் இராசயானப்பொருள். இது அனேகமாக அனைத்து பெற்றோலிய கழிவுகளிலும் காணப்படும். இதன் உடனடி நச்சுத்தன்மை தலைசுற்று, வாந்தி, வயிற்றுகுமட்டல், தலைவலி என்பவற்றை ஏற்படுத்தும். அதிக அளவில் உட்சென்றால் வலிப்பு, கோமா, மரணம் என்பவற்றை ஏற்படுத்தும். குறைந்த அளவில் நீண்டகால உள்ளெடுத்தல் இனப்பெருக்க தொகுதி பாதிப்பு, மலட்டு தன்மை, ஜீன் மாறுபாடு, உடல் நிர்பீடத்தன்மை குறைவு, பல்வகை இரத்த புற்றுநோய் என்பவற்றை ஏறப்டுத்தும்.

மற்றைய இரசாயனப் பொருள் தொலுயீன் எனப்படும் ஐதரோ காபனாகும். இது மைய நரம்புத்தொகுதி பாதிப்பினை தரும். உடனடி பாதிப்புகள் மறதி, அசதி, இயக்க நரம்புத்தொகுதி பாதிப்பு, என்பன, அளவுக்கு அதிக உள்லேடுப்பு உடனடி மயக்கத்தையும் மரணத்தையும் தரும். நீண்டகால குறைந்தளவு உள்ளேடுப்பு மைய நரப்புதொகுதி பாதிப்பு, ஈரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும்.

மேலும் பெற்றோலிய பொருட்களில் குறிப்பாக மண்ணெண்ணெயில் கலக்கப்படும் MTBE என்ற ஒருவகை ஐதரோகாபன் நீரில் பகுதியாக கரையும் தன்மை உடையது. மண்ணெணெய் கழிவுகளை நிலத்தில் கொட்டும் போது இது நீருடன் கலந்து பாதிப்பினை தரும். இது ஒரு புற்றுநோய் காரணியாகும்.  பெற்றோலிய பொருட்களில் காணப்படும் நச்சுப் பொருட்களின் விகிதாசாரம் படம் - ௦2 இல் தரப்பட்டுள்ளது.

படம் - ௦2 


யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு
நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுகை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும் நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.
முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். 
இந்த அமைப்புதான் இன்றைய கழிவு எண்ணெய் பிரச்சனைக்கும் காரணம். கீழ்வரும் மாதிரி உருப்படத்தின் (படம் - ௦3) மூலம் வாசகர்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். 

கழிவு எண்ணெய் கலப்பு குற்றச்சாட்டுகளும், வாதப்பிரதிவாதங்களும்
இந்த விடயத்தில் எதுவித ஆய்வு முன்னெடுப்புகளும் இன்றி நொதன் பவர் கொம்பனி குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டை  குறித்த நிறுவனம் மறுத்துள்ளதுடன் தகுந்த பிரதி வாதங்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று. இது தொடர்பாக மூன்று கருத்துக்களை அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி முன்வைத்துள்ளார். அவையாவன;

1.       தமது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு எண்ணெய் நிலத்தில் சேர்வதில்லை என்றும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பினரால் வெளியில் கொண்டு செல்லபபடுவதாகவும் கழிவு எண்ணெய் எரி உலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதனால், அதனை தமது நிறுவனம் வர்த்தக ரீதியாக நல்ல விலைக்கு விற்று வருவதாக, இந்த விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ஒரு சிறந்த கழிவு முகாமைத்துவ முறை என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

2.       சிறிதளவு நேரமே செயற்படும் தமது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் 2, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளுக்குச் சென்று கலப்பது சாத்தியமற்ற விடயம். இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஏனெனில் யாழ் குடாநாட்டு நிலவியல் அமைப்பில் இதற்கான சாத்தியம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே தகுந்த நிலவியல் ஆய்வுகள் அவசியம்.

3.       நொதன் நிறுவனம் சுன்னாகத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அங்கு கழிவு எண்ணெய் நிரம்பிய ஒரு குளம் இருந்ததாகவும், 2012 ஆம் ஆண்டு அதனை மண் போட்டு நிரப்பி அந்த இடத்தில் துணை-மின்நிலையம் ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், ஆனால் எவரும் அந்த எண்ணெய்க் குளத்தில் நிரம்பியிருந்த கழிவு எண்ணெய்க்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராயவில்லை என்பது மிக முக்கியமான தவிர்க்க முடியாத காரணி, 

தற்போதைய நிலவரத்தின் படி சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் போன்ற பிரதேச கிணறுகளில் காணப்பட்ட கழிவு எண்ணெய் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பிரச்சனையின் முழுமையினையும் புரிந்து கொள்ள கீழ்வரும் கேள்விகளும் அத்தியாவசியானவை என கட்டுரை ஆசிரியரால் முன்மொழியப்படுகிறது. யாழ் குடாநாட்டில் இயங்கும் பெற்றோல் நிலையங்கள்(fuel stations), வாகன திருத்த நிலையங்கள் (service stations) என்பவற்றின் கழிவு முகாமைத்துவம் சரியான விதத்தில் இருக்கின்றனவா? இவற்றில் வெளியாகும் கழிவு எண்ணெய் எங்கு கொட்டப்படுகிறது? பெற்றோல் நிலையங்களின் நிலத்தடி சேமிப்பு தாங்கிகள் வருடாந்தம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா? மொத்தம் எத்தனை service stations இருக்கின்றன? மொத்தம் எத்தனை பெற்றோல் நிலையங்கள் இருகின்றன?

யாழ்குடாநாட்டின் திட்டமிடல், அபிவிருத்தி என்பன கட்டாயம் சூழலியல் தாக்க மதிப்பீட்டுடனும் முறையான கழிவு முகாமைத்துவத்துடன் செய்வது அத்தியாவசியமான ஒரு நிபந்தனை. இதனை பொறுப்பு வாய்ந்த சூழல் அதிகாரசபை அதிகாரி, மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தும் அதேவேளை அனைத்து பிரதேச வாசிகளும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமான ஒன்று. 

Sunday 25 January 2015

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அதுபற்றிய பிரச்சனைகளை அறிவோம்!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அதுபற்றிய பிரச்சனைகளை அறிவோம்!
தற்போது மிகப்பாரிய பிரச்சனையாக சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களால் சுன்னாக நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் கலப்பு பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்த பிரச்சனையினை ஆழமாக புரிந்து கொள்ளும் நோக்காக யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அமைவியல் பற்றி சற்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுகை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும் நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.

முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும்  Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான்  நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான்.

இந்த அமைப்புதான் இன்றைய கழிவு எண்ணெய் பிரச்சனைக்கும் காரணம். கீழ்வரும் மாதிரி உருப்படத்தின் மூலம் வாசகர்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இங்கு கழிவு எண்ணெய் மட்டும்தான் பிரச்சனையா? என்றால் நைத்திரேற்று, பூச்சிகொல்லி என்பன அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது என்று யாழ்பல்கலைக்கழகம், நீர் வள சபை ஆகியன செய்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

ஆக மேலும் யாழ்குடாநாட்டிற்குள் நிலத்தில் கழிவுகள் புதைத்தல், இரசாயன உரப்பாவனை என்பனவும் மறைந்திருந்து அச்சுறுத்தும் காரணிகள்!

வழமையான எமது மனபாங்கான தலைக்கு மேல் வந்தபின்னர் அவன்தான் காரணம், இவன்தான் காரணம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி காரணம் சொல்லிக்கொண்டு இருப்போம்.

இதுபற்றி யாழ்பல்கலைகழகம், புத்தி ஜீவிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள்,